பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவில்லை என்றார். ஆய்வில், 4 முதல் 12 வயதுக்குள்பட்ட 244 குழந்தைகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களது பிற நோய்கள் குறித்த விவரம் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோரின் குழந்தைகள், குழந்தை பிறந்த பின் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆனால் கருவுற்ற காலத்தில் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆனால் குழந்தை பிறந்த பின் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் குழந்தைகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் போல் அவர்களது குழந்தைகளுக்கும் நுரையீரல் செயல்பாடு குறைந்து கொண்டே வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததைவிட, குழந்தை பிறந்த பின் அப் பழக்கம் தொடர்வது மிகவும் ஆபத்தானது என்றும் தெரியவந்தது. இந்த ஆய்வைத் தொடர்ந்து, புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் 2000 குழந்தைகளைக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார் இம் மாணவர்.


No comments:
Post a Comment